பதிப்புத் துறை முன்னோடி முல்லை முத்தையா நூற்றாண்டு மலர்- தொகுப்பு; மு.பழநியப்பன், மு.ராமநாதன், மு.கருப்பையா; பக். 248; ரூ.300; முல்லைப் பதிப்பகம், சென்னை-40; 98403 58301.
முல்லை முத்தையா, சக்தி வை.கோவிந்தன், தமிழ்ப்பண்ணை சின்ன அண்ணாமலை மூவரும் பதிப்புலக முன்னோடிகள். ஒரு பதிப்பாளர் எழுத்தாளராக இருப்பது அபூர்வம். அந்த வகையில், முல்லை முத்தையா எழுத்தாளராக 'பஞ்சாயத்து ராஜ்யம்' குறித்து பல நூல்கள் எழுதியவர். பாரதிதாசன் நூல்களை முதன்முதலில் வெளியிட்டவர். அவர் வீடு வாங்க உதவியவர், கண்ணதாசன் சென்னை வந்தபோது தனது பதிப்பகத்தில் தங்கிக்கொள்ள இடம் கொடுத்தவர், இலக்கிய உலகில் க.நா.சுப்ரமணியம், தி.ஜ.ரங்கநாதன், வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன் போன்றோரிடம் பழகியவர், தலைசிறந்த உலக இலக்கியங்களை தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக, சுருக்க நாவலாக வெளியிட்டவர்.
குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட்டதுடன், தானே சில நூல்களையும் எழுதியவர் என்று இம்மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.
85 கட்டுரைகள் கொண்ட இந்த நூற்றாண்டு மலர் இரு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. முதல் பகுதி வாழ்த்து. இரண்டாம் பகுதியில் முல்லை முத்தையா குறித்து அறிஞர்கள் பலரால் எழுதப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதி, வ.ரா.பரலி, சு.நெல்லையப்பர், ஏ.எஸ்.பி. ஐயர், சோமலெ, தொ.மு.சி. ரகுநாதன், பேரா.ந.ராமநாதன் சாண்டில்யன் கட்டுரைகளில் பல தகவல்களும் உள்ளன. ஒருவரின் நூற்றாண்டு மலர் தொகுப்புக்கு இது ஓர் உதாரணமாக இருக்கிறது.