நூல் அரங்கம்

சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியல் நெறிகள்

21st Nov 2022 01:50 PM

ADVERTISEMENT

சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியல் நெறிகள் - ப.பாலசுப்பிரமணியன்;  பக்.176; ரூ.200, அழகு பதிப்பகம், சென்னை-49; 044 2650 2086.

சங்க கால தமிழ் இலக்கியங்கள் வழியாக மனித இனத்துக்கு வழங்கிய செறிவார்ந்த வாழ்வியல் நெறிகளின் சுருக்கமான தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. பதினெண் மேல் கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்களிலிருந்து அகம், புறம்சார் அறவியல் கருத்துகள் நூலில் விதைக்கப்பட்டுள்ளன.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... குறள் மூலம் அனைத்து உயிர்களும் சமமே என்றும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்..' பாடல் மூலம் உலக மக்கள் யாவரும் உறவினரே  என்ற சமத்துவம்- சகோதரத்துவத்தை உலகுக்கு முதலில் உரத்துச் சொன்னது தமிழ் இலக்கியங்களே. ஆடம்பரம் பெருகிவிட்ட இன்றைய நாகரிக, அவசர உலகில் "உண்பது நாழி, உடுப்பவை இரண்டே..' என்ற சிந்தனை தனிமனித வாழ்வை சிக்கனத்துடன் நிதானித்து நடைபோட வைக்கிறது.

பண்டைத் தமிழர்கள் வாழ்வியலாக கடைப்பிடித்தொழுகிய வாய்மை, செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, புறங்கூறாமை, இன்னா செய்யாமை, ஈகை, விருந்தோம்பல், இல்லற மாண்பு போன்ற அறம்சார் நெறிகளிலிருந்து மனித வாழ்வு வழுவிச் செல்லலாகாது என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அழுத்தமாக நிறுவுகிறார் நூலாசிரியர்.

ADVERTISEMENT

ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க குடவோலை முறை பழக்கத்தில் இருந்தது என்பது அகநானூறு வழி தெரிகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் செவ்வியல் சமுதாயமாக ஏற்கப்படும் சங்க கால சமுதாயத்தின் அறங்களில் பல இக் கால சமுதாயத்துக்கும் அவசியத் தேவை என்பதை முன்னிறுத்தும் இந்நூல் கூடுதல் கவனம் பெறுகிறது. வீட்டு அலமாரிகளில் இடம் பெற வேண்டிய நூல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT