நான் சென்ற சில நாடுகள்; ந.ராமசுப்ரமணியன்; பக்.560; ரூ.950; நடேசன் சாரிட்டிஸ், சென்னை-45; 044 - 22266614.
வழக்குரைஞர், பொருளாதார நிபுணர், கல்வியாளர் என பன்முகங்கள் கொண்ட ந.ராமசுப்ரமணியன், தனது சர்வதேசப் பயணங்களைத் தொகுத்து வெளியிட்ட நூல் இது. தனிநபரின் சுற்றுப்பயணக் கதை என்ற நிலையில் கடந்து போக முடியாமல் வாசிப்பு சுழலுக்குள் மூழ்க வைக்கிறது.
நேபாளத்தில் தொடங்கி, சிங்கப்பூர், வங்கதேசம், உஸ்பெகிஸ்தான், இலங்கை, வியத்நாம், பூடான், பிலிப்பைன்ஸ், தைவான், தாய்லாந்து, சீனா, செர்பியா, கிரீஸ் என எண்ணற்ற நாடுகளின் சிறப்புகளையும், தனித்துவங்களையும் பயணக் கட்டுரைகளின் வாயிலாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
பொதுவாக, பயணக் கதைகள் சுயபுராணங்களாகவே இருக்கும். ஆனால், இந்நூல் உலக நாடுகளின் வரலாற்றையும், அதன் அரசியல் சூழலையும் பேசுகிறது. குறிப்பாக, நூலாசிரியர், மியான்மருக்கு பயணித்தபோது, அங்குள்ள ரோஹிங்யா முஸ்லிம் இன மக்களின் பிரச்னைகளை களத்துக்கே சென்று ஆய்வு செய்கிறார்.
ஜகார்த்தாவில் 700 மொழிகள் பேசப்படுவது, டாக்காவில் 50 ஆயிரம் சைக்கிள் ரிக்ஷாக்கள் பயன்பாடு, கல்வியும், மருத்துவமும் முற்றிலும் இலவசம் போன்ற அரிய தகவல்களும், உலக நாடுகளின் வரலாற்றையும், தன்னியல்புகளையும், தனிச்சிறப்புகளையும் அறிந்துகொள்வதற்கான கையேடு இந்தப் புத்தகம்.