சிறகு முளைத்த சிட்டுகள்-முள்ளஞ்சேரி மு.வேலையன்,பக்.194;ரூ.200, காவ்யா பதிப்பகம், சென்னை-600024, 98404 80232.
விண்வெளித் துறையில் பங்களிப்பு செய்த நூலாசிரியர், தான் சேகரித்த அறிவியல் தேடல்கள், அளித்த பயிற்சிகள், கள ஆய்வுகள், கருத்தாக்கங்கள், அறிவியலாளர்களின் ஆற்றலுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
"வாழ்வியல் சார்ந்த அடிப்படை புரிதல் கொண்டிருப்பது அவசியம். இதன்படி, வாழ்வை இலகுவாகத் தகவமைத்துக் கொள்ள முடியும். நிலையான வாழ்க்கைக்கு நிலைத்தன்மை எனும் சிந்தனையே தேவை. அதற்கு புவிசார் தொழில்நுட்பத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்'' என்பது நூல் முன்னிறுத்தும் செறிவான பார்வை.
ஆற்றல், நீர் நிலை, சுற்றுச்சூழல், வாழ்வாதாரம், காலநிலை போன்ற நிலைத்தன்மைகளை 5 கூறுகளாகப் பிரித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கங்கள் அரிய தகவல். இயற்கையோடு இயைந்த அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்டும்- ஆழமான புரிதலை ஏற்படுத்தும் வண்ணம் பல்வேறு ஆக்கபூர்வமான தகவல்கள் உள்ளன. பண்டைய நீரியல் அமைப்புகள், தமிழரின் நீர் மேலாண்மை, தமிழ் இலக்கியத்தில் வானியல்-அறிவியல் பயன்பாடுகள், வேளாண் உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு, விண்வெளி தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தகவல்கள் செம்மையாக தொகுக்கப்பட்டுள்ளன.
இயற்கை வளங்கள், மரபுசாரா ஆற்றல் வளங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைகள் கவனம் ஈர்க்கின்றன. அறிவியல் சார் விழிப்பை ஊக்குவித்து, இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற கடமை உணர்வை வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்று விட்டது இந்த நூல்.