கருணை கடல் ஸ்ரீஷீரடி சாய்பாபா - குன்றில் குமார்; பக்.272; ரூ.250; சங்கர் பதிப்பகம், சென்னை-49; - 044-26502086.
"பக்தர்கள் என் குழந்தைகள். நான் உங்கள் பிதா. என்னிடம் ஒவ்வொன்றையும் நீங்கள் அடைய வேண்டும். எவன் என் நாமத்தை நாள்தோறும் ஜெபித்து வருகிறானோ, அவன் முக்திப்பேறு அடைகிறான்" என்கிறார் ஷீரடி சாய் பாபா.
"நீ வணங்கும் தெய்வம் எதுவோ அதையே எப்போதும் அண்டி இரு. விரைவில் உன்னை கடவுள் ரட்சிப்பார்'' என்பது போன்று கடவுளை வணங்கும் வகையிலான நூற்றுக்கணக்கான ஒற்றை வரியிலான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஷீரடியில் பாபா அவதரித்தது, அவரது தோற்றம், செயல்பாடுகள், யோகக்கலை, இந்து-முஸ்லிம் சிநேகத்தை வளர்த்தது, பயிற்சி பெற்ற பாதாள அறை, தன் மரணத்தை முன்பே அறிந்து சமாதியானது ஆகியவை முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன.
பிச்சை எடுத்த உணவை பக்தர்கள், பறவைகள், விலங்குகளுக்கும் கொடுத்து இன்புற்ற மகான். அவரது அருகில் இருந்து அவருக்கு வேண்டிய பணிகளைச் செய்து அவரது அணுக்கத் தொண்டராக இருந்து இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்ளும் பாக்கியம் பெற்ற பூசாரி மகல் சபதி, பையாஜி மூதாட்டி, மாதவராவ் பல்வந்த் தேஷ்பாண்டே (ஷாமா), தத்யா பாட்டீஸ், ஜெகன்கிரி தருவாலா, லட்சுமிபாய், தாஸ் கானு மகராஜ், உபாசனி பாபா, நாணா சந்தோர்க்கர் முதலியோரின் பக்தி குறித்தும், அரிய நிகழ்ச்சிகள் குறித்தும் இரண்டாம் பாகம் விவரிக்கிறது.
பாபா தண்ணீரில் விளக்கு எரித்தது, புத்திரப் பாக்கியம் அருளியது, கோதுமை மாவின் ரகசியம், கல்லைக் கரைத்தது, உப்புத் தண்ணீர் நல்ல தண்ணீரானது, விஷத்தை நீக்கியது என அவர் நிகழ்த்திய அற்புதங்கள் மூன்றாவது பாகத்திலும், பாபாவின் அருளுரைகள் நான்காம் பாகத்திலும், பக்திப் பாடல்கள், 108 போற்றி ஆகியவை ஐந்தாம் பாகத்திலும் இடம்பெற்றுள்ளன. பாபா பக்தர்களுக்குக் கிடைத்த புதுப் பிரசாதம் இந்த நூல்.