வாழ்வே ஒரு மந்திரம் - தமிழருவி மணியன்; பக்.280; ரூ.260; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; 044 - 2431 4347.
ஒரு நூறு சமயக் கிரந்தங்களையும், அவற்றிற்கான ஓராயிரம் வியாக்கியானங்களையும் வாசிக்கவும் யோசிக்கவும் எங்களுக்கு நேரமில்லை; ஆனால் அவற்றிலிருந்து வடித்தெடுத்த சாரத்தை யாராவது கொடுத்தால் பருகத் தயார் என்ற நிலையில்தான் இன்று பெரும்பாலானவர்கள் உள்ளனர். அத்தகையோரின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளிவந்துள்ள தகவல் திரட்டுதான், இந்த நூல்.
திருமந்திர கருத்துகளை மையமாகக் கொண்டு இன்றைய இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிகள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.
எட்டு தலைப்புகளில் ஏராளமான ஷயங்கள். 'வாழ்க்கை வாழ்வதற்குத்தான். மூலையில் முடங்கி அழுவதற்கு அல்ல; சலிப்புற்று சாவதற்கும் அல்ல' - இது போன்ற நம்பிக்கை ஊட்டும் வாசகங்கள் வாசகர்களைப் பரவசப்படுத்தும்.
'மரணத்தை விட அதைப் பற்றிய பயமே அதிக வலியை அளிக்கிறது. மரணம் உடலுக்குத்தான்; ஆன்மாவுக்கு இல்லை என்று உணர வேண்டும். எதிர்கால கனவுகள் மனிதர்களை வாழத் தூண்டுகின்றன. பழுத்த இலை கிளையை வாழ்த்தி, உயிர் கொடுத்த மரத்துக்கு நன்றி தெரிவித்து உதிர்வதைப் போன்றே நாமும் விடைபெற வேண்டும்.'
'ஆயிரம் வழிகளில் அடக்க முயன்றாலும், அங்காடி நாயாகத்தான் மனம் அலைபாய்கிறது. எல்லாவற்றையும் வசப்படுத்திய சித்தர்களால் மனத்தை மட்டும் எளிதில் வசப்படுத்த முடியவில்லை.'
'பேசினால் மானுடம் மேன்மையுறப் பேச வேண்டும். பேனா பிடித்து எழுதினால், மனித மனத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றுவதற்காக எழுத வேண்டும்' - இவை போன்ற நூலாசிரியரின் கருத்துகள் பேசுபவர்களும், எழுதுபவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துகளாகும்.