தமிழர் நாகரிகமும் தமிழ்மொழி வரலாறும் (பத்து தொகுதிகள்) - அரங்க இராமலிங்கம்; பக். 4,330 (பத்து தொகுதிகளும் சேர்த்து); ரூ. 1,600, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 600 017; 044 - 2814 0347.
தமிழில் தொகுப்பு நூல் வருவது புதிதன்று. புலவர்கள் பாடிய பாடல்களைப் பின்னொரு காலத்தில் அறிஞர்கள் தொகுத்துப் பாதுகாத்துள்ளனர். அவை, பாடலின் பொருள் அடிப்படையிலும், திணை அடிப்படையிலும், யாப்பு அடிப்படையிலும், எண் அடிப்படையிலும், எழுதப்பட்ட காலத்தின் அடிப்படையிலும் தொகுக்கப்பட்டன.
இந்த நூலில், தமிழர் பண்பாடு, தத்துவம், இல்வாழ்க்கை, ஆட்சிமுறை, கட்டடக்கலை போன்றவை குறித்தும், தமிழின் தோற்றம் - வளர்ச்சி, வரலாறு, இலக்கிய வரலாறு குறித்தும் பதினாறு அறிஞர்கள் எழுதியுள்ள நீண்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
மா. இராசமாணிக்கனாரின் கட்டுரையுடன் ('தமிழக ஆற்றங்கரை நாகரிகம்') தொடங்கும் இத்தொகுப்பில், புலவர் த. கோவேந்தன் ('தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்'), கி.ஆ.பெ. விசுவநாதம் ('தமிழின் சிறப்பு'), ந. சஞ்சீவி ('சங்ககாலச் சான்றோர்கள்'), க. வெள்ளைவாரணனார் ('சங்ககாலத் தமிழ் மக்கள்'), ரா. ராகவையங்கார் ('தமிழகக் குறுநில வேந்தர்கள்), அ.ச. ஞானசம்பந்தன் ('மகளிர் வளர்த்த தமிழ்'), தேவநேயப் பாவாணர் ('தமிழ் வரலாறு', தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் ('தமிழ் இலக்கிய வரலாறு'), நா. வானமாமலை ('தமிழர் பண்பாடும் தத்துவமும்') உள்ளிட்ட 21 தமிழறிஞர்களின் நெடுங்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அத்தனையும் தமிழின் ஆழ அகலத்தை அறிய உதவும் அரிய கட்டுரைகள்.
ஒரு பொருள் குறித்து அறிஞர்கள் பலரும் எழுதிய கருத்துகளை ஒருசேரப் படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. நூல்கள் அனைத்துமே தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டவை. அரசுப்பணி தேர்வு எழுதுவோர்க்கும், தமிழ் பயிலும் மாணவர்க்கும் இந்நூல் பெரிதும் பயன்படும். தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரு கருவூலம் எனலாம்.