நூறு புராணங்களின் வாசல் - முபீன் சாதிகா; பக்.128 ; ரூ.130; நன்னூல் பதிப்பகம், மணலி, திருத்துறைப்பூண்டி- 610203.
நூலாசிரியர் தனது முகநூலில் அவ்வப்போது எழுதி வந்த குறுங்கதைகளின் தொகுப்பு இந்த நூல். மொத்தம் நூறு கதைகள் உள்ளன. ஃபிளாஷ் ஃபிக்ஷன் அல்லது மைக்ரோ ஃபிக்ஷன் என்று கூறப்படும் வகையைச் சார்ந்தவை. ஈசாப்பின் நீதிக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ஜென் கதைகள் போன்ற வடிவத்தில் இவை எழுதப்பட்டிருக்கின்றன. இந்தக் கதைகளில் யதார்த்தம் போன்ற அம்சங்களுடன் அதீத கற்பனையும் கலந்து தரப்பட்டிருக்கிறது.
உதாரணமாக, 3333-ஆம் ஆண்டில் நவீன மனிதர்கள் தனி கிரகத்தில் வசிக்கிறார்கள். அந்த மக்கள் குழந்தை பெறவேண்டுமானால் அதற்கு மனு செய்துவிட்டு, அவர்களது முறை வரும்வரை காத்திருக்க வேண்டும். குழந்தை 75% எந்திரமாகவும், 25% இயற்கையாகவும் இருக்கும். உடலின் எந்தப்பகுதி பழுதானாலும் மாற்றிக்கொள்ளலாம். இயற்கையான குழந்தையைப் பெற்றால், நாகரிகமடையாதவர்கள் என ஒதுக்கப்பட்டு, பூமி கிரகத்திற்கு அனுப்பப்படுவார்கள். "3333'- குறுங்கதையின்அழகிய கற்பனை தாய்மையைப் போற்றுகிறது.
வித்தியாசமான நூறு கதைகள். பல திரைப்படங்களுக்கான கதைக்கருவும், சம்பவங்களும், காட்சிகளும் இந்நூலில் விரவிக் கிடப்பதைக் காணமுடிகிறது.