கதம்பம் (சிறுகதைத் தொகுப்பு) - டி.பத்மநாபன்; பக். 164; ரூ.160; தி ரைட் பப்ளிஷிங், சென்னை-17; 044-2433 2682.
17 சிறுகதைகள் தனித்துவத்துடன் கருத்தை வலியுறுத்தும் வகையில் இருக்கிறது. 'நிழல்களுக்கு நிறமில்லை' என்ற கதையில், கல்லூரியில் நீக்கப்பட்ட மாணவர் எதிர்வீட்டில் வசிக்கும் மணமான பெண்ணோடு முறையற்ற நட்பு ஏற்பட்டு ஓட்டம் எடுக்கத் துணிந்தபோது மாணவரின் தாய் கூறும் அறிவுரையும், மாணவன் மனம் மாறி பணியில் சேர்ந்து 2 ஆண்டுகள் கழித்து ஊருக்கும் வரும்போது விடுதியில் அந்தப் பெண் தவறான வழியில் இருப்பதைப் பார்க்கும்போது இருவருக்கும் ஏற்படும் தடுமாற்றமும், பேச்சும் கதையின் திருப்புமுனைதான்.
'தாஜ் மகாலும் பகவத் கீதையும்' எனும் கதையில், காதலர்கள் திருமணத்துக்கு மதம் தடை என்பதால், 'ஹசினா' காயத்ரியாகவும், 'சரவணன்' ஷாஜகானாகவும் மாறி திருமணம் செய்யும் முடிவு அபாரம்.
'ஒரு நாய் அழுது கொண்டிருக்கிறது' என்ற கதையில் மருத்துவமனையில் எம்எல்ஏ சிகிச்சை பெறும்போது அவர் இறந்தால் இடைத்தேர்தலா என்பது குறித்து கட்சியினர், உறவினர்கள், பொதுமக்கள் பேசும் உரையாடல்கள் ஆச்சரியப்பட வைக்கிறது. இறுதியில் அந்த நாய் ஆம்புலன்ஸில் சிக்கி இறக்க, மற்றொரு நாய் அழுவதோடு கதை முடிவடைவது என்பது மனிதர்கள் இப்படி இல்லையே என்று எண்ணவும் தோன்றுகிறது.
'அழகுக்கு அலைந்தான்' என்ற கதையில், மனைவி இறப்பால் கணவன் படும் கஷ்டங்கள், நினைவுகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. நடைமுறை வாழ்க்கையையே கதைகளாகப் படைத்துள்ளார்.