வாரணாவதம்: துரியோதன பர்வம்-களம்பூர் பாபுராஜ், பக்.240, ரூ.275, கிழக்கு பதிப்பகம், சென்னை-14, 044- 42009603
மகாபாரதத்தின் எதிர் நாயகனாக சித்திரிக்கப்படும் துரியோதனன், போர்க்களத்தில் கடைசித் தருணத்தில் நின்று தனது நிலைக்கு காரணமான கடந்த காலச் செய்கைகளை பகுத்தறிந்து நினைவுகூர்வதாக- கற்பனையாக விரிகிறது இந்நூல்.
நிறை-குறைகள் நிரம்பிய இயல்பினனான துரியோதனனை, சந்தர்ப்பச் சூழல்கள் அதர்மங்களை நோக்கி எவ்வாறு உந்தித் தள்ளியது என்பதை 38 அத்தியாயங்களில் எழுச்சியுற காட்சிப்படுத்தி இருக்கிறார் நூலாசிரியர்.
துரியோதனனின் கோணத்தில் இந்நூல் அணுகுவது முற்றிலும் புதிய அனுபவத்தைத் தருகிறது. விறுவிறுப்பான கதையாளுமை-எழுத்தாளுமையால் இலகுவாக கடத்துகிறார் நூலாசிரியர்.நிறைவேறா ஆசைகள், எதிர்பாரா ஏமாற்றங்கள், சந்தித்த அவமானங்கள், பரிகாசத் தருணங்கள், புகட்டப்பட்ட துர்போதனைகளே பாண்டவர்கள், திரெளபதி மீதான வெறுப்பாக மாறி பழி உணர்வுக்கு தூண்டுகோலாகி விடுகிறது துரியோதனனுக்கு.
அதேவேளையில், தாய்-தந்தை மீதான பற்று, பலராமருடனான பாசம், கர்ணனுடனான நட்பு, சுபத்திரை மீதான காதல், நல்லாட்சி தரும் அவா என அதிகம் கவனிக்கத்தவறிய துரியோதனனின் மறுபக்கம் கவனம் பெறுகிறது.
அதர்மம் என தெரிந்து தீச்செயல்கள் புரிய சில தருணங்களில் தயங்குவது துரியோதனனின் இயல்பான குணத்துக்கு வெளிப்படை. மகாபாரதத்தை ஆழமான புரிதலுக்கு உட்படுத்தும் விதமாக வெளிவந்துள்ள இந்நூல் கவனம் ஈர்க்கிறது.