தொடரும் நிழலாய் (நாவல்) - இல. அம்பலவாணன்; பக். 128; ரூ.130; காவ்யா, சென்னை-14; 044-2372 6882.
எய்ட்ஸ் தொற்று குறித்து ஏறக்குறைய 30 ஆண்டுகளாகியும் சரியான புரிதல் இல்லை. சமூகச் செயல்பாட்டாளரான நூலாசிரியர் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுப் பணியில் இருந்துவரும் நிலையில், விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் நாவலை படைத்துள்ளார்.
நாவலின் கதாநாயகி சித்ரா தனது கணவர் சண்முகத்துக்கு ஏற்பட்ட முறையற்ற நட்பால் தொற்று உருவானது. இதனால் அவர் பணியிடத்திலும், உறவினர்களிடத்திலும் பாதிக்கப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் தத்ரூபமாய் எழுதியிருக்கிறார். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் புறக்கணிக்கப்படுவதையும், இதுதொடர்பாக மக்களிடையே ஏற்பட வேண்டிய மனமாற்றத்தையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
தனது கணவருக்கு தொற்று ஏற்பட்டவுடன் பயம், கோபம், வெறுப்பு, விரக்தி, குற்ற உணர்வு உள்பட அத்தனை உணர்ச்சிகளையும் தனது அருமையான நடையில் வெளிப்படுத்தியது விழிப்புணர்வு தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளை நம்மிடையே ஏற்படுத்துகிறது.
தனது கணவர் சண்முகத்தின் மறைவுக்குப் பின்னர் சித்ரா மகள் கயலின் எதிர்கால வாழ்வுக்காகப் பாடுபடும் கடினமான சூழலைப் படிக்கும்போதே கண்களில் நீர் வழிகிறது. ஆனால், படிக்கும்போது இது உண்மைக்கதையோ என்ற ஐயமும் எழுகிறது. மொத்தத்தில், எய்ட்ஸ் நோயாளிகள், விழிப்புணர்வுப் பணியில் ஈடுபடுவோர் மட்டுமன்றி, மருத்துவத் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கும், சமூக சேவையாளர்களுக்கும் இது ஓர் வழிகாட்டி நூல் எனலாம்.