முரசொலி சில நினைவுகள் - முரசொலி செல்வம்; பக்.526; ரூ.300; சீதை பதிப்பகம், சென்னை - 5; )044- 2844 3791.
முரசொலி பதிப்பாளரும் ஆசிரியருமான முரசொலி செல்வம், இளம் தலைமுறை வாசகர்களுக்காக எழுதிய 100 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்திருக்கிறது.
விலைவாசிப் போராட்டம்(1962), ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் (1965) எமர்ஜென்சி (1975) அதன் அடக்குமுறைகள் - சோதனைகள் - சென்சார் கெடுபிடி, எம்.ஜி.ஆர். காலத்திய ஆட்சிமுறை, அதில் எழுந்த பிரபலமான குற்றச்சாட்டுகளான திருச்செந்தூர் கோயில் உண்டியல் திறப்பின்போது அறங்காவலர் சுப்பிரமணியப்பிள்ளை கொலை, அதனை வெளிக்கொணர போடப்பட்ட பால் கமிஷன், அதன் அறிக்கையை வெளியிடாததையொட்டி நடந்த சம்பவங்கள், கைதுகள் குறித்த விவரங்கள் விரிவாக எழுதப்பட்டுள்ளன.
பால்டிகா - பல்கேரிய கப்பல் பேரம், எரிசாராயம்அண்டை மாநிலங்களுக்கு கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டு - அதில் எழுந்த வாதப் பிரதிவாதங்கள்;
பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போடப்பட்ட கமிஷன்கள்- ராமமூர்த்தி கமிஷன், சதாசிவம் கமிஷன், ராமபிரசாத ராவ் கமிஷன், கைலாசம் கமிஷன் என எண்ணற்ற கமிஷன்களின் பின்னணி துப்பறியும் கதைபோல விரிவாக எழுதப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி, முரசொலி மாறன், அவர் தம்பி செல்வம், அமிர்தம், மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், மு.க.தமிழரசு உள்ளிட்டோர் முரசொலிக்காக உழைத்த வரலாறுகளும் இதில் கூறப்பட்டுள்ளன.
முரசொலியின் வரலாறு திமுகவின் வரலாறாகவும் - திமுகவின் வரலாறு முரசொலியின் வரலாறாகவும் உள்ளதை இந்நூலில் உள்ள சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்நூலைப் படிக்கையில் திமுக எதிர்கொண்ட பல்வேறு சவால்களைப் பற்றியும் அவற்றை எவ்வாறெல்லாம் அது கடந்து வந்திருக்கிறது என்பதையும் அதற்கு முரசொலி எந்த அளவுக்குப் பயன்பட்டிருக்கிறது என்பதையும் நூலாசிரியர் செல்வம் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
திமுகவின் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டி நூலாக அமைந்திருக்கிற இந்நூல், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு பழைய நினைவுகளை அசைபோடவும் பயன்படும்.