காட்டு முல்லை - கு.இரவீந்திரன்; பக்.300; ரூ.310; காவ்யா, சென்னை-24; -)044 - 2372 6882.
வனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதை மையக் கருத்தாகக் கொண்ட நாவல். அமைச்சர்கள், அரசியல்வாதிகள், காட்டில் வாழும் சிலர், வன அதிகாரிகளை தன் வலையில் சிக்க வைத்து சமூக விரோதியான காளி, வனத்தை எப்படி அழிக்கிறான் என நகர்கிறது கதை.
காட்டில் விறகு சேகரித்து நோயுற்ற தனது அம்மாவையும், தம்பியையும் காப்பாற்றுகிறாள் மயூரி. காட்டை அழித்து மரங்களைக் கடத்தும் காளியின் கும்பலை, பழங்குடி மக்களின் துணையுடன் - பல இக்கட்டான சூழல்களை எதிர்கொண்டு- கைது செய்ய வைக்கிறாள் மயூரி. நடனப்பள்ளி ஆசிரியர் ரஞ்சினியும் புலனாய்வுத்துறை அதிகாரி குமாரும் அவளுக்கு உதவுகின்றனர்.
"சமூக விரோதச் செயல்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பதுதான்' என்று சமூக அவலத்தை நாவல் வழியாக சாடியுள்ளார் நூலாசிரியர்.
கதையின் ஓட்டம் தொடக்கம் முதல் முடிவு வரை தொய்வில்லாமல் செல்கிறது. நாஞ்சில் வட்டார மணம் நாவலின் பக்கங்களில் வீசுகிறது. சமகாலச்சிக்கல், நீண்ட கதையாகப் புனைந்துரைக்கப்பட்டுள்ளது.
உலகப் பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு கடல். ஒரு பங்கு நிலம். அந்த நிலப்பரப்பிலும் 33 சதவீதம் காடு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மழை பொழியாது. காடு வளர்ப்போம்; மழை பெறுவோம் என அறிவுறுத்தும் நாவல்.