பள்ளிக்கூடம் படிப்பதற்கு அல்ல - இளவேனில்; பக்.232; ரூ.280; இளா வெளியீட்டகம், எம்ஐஜி 1, 8/5, பிருந்தாவன் டவர்ஸ், அண்ணா மெயின்ரோடு, கே.கே.நகர், சென்னை -78.
வகுப்பில்கடைசி பெஞ்ச் மாணவர்களைப்பற்றி, நன்றாகப் படிக்காதவர்கள், குறும்புக்காரர்கள்,சேட்டை செய்பவர்கள், மக்குகள் என பலவிதமான கருத்துகள்இருக்கின்றன. இந்த நாவலில் வரும் நிலவன் கடைசி பெஞ்ச் மாணவன்.
அவனுக்கு இந்தக் கல்விமுறை ஒத்துவரவில்லை.ஒரு மாணவனுக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிந்து, அதை வளர்க்க உதவுவதே கல்வியாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே மாணவர்கள் படிக்கும் இயந்திரங்களாக இருக்கிறார்கள். ஆசிரியர்கள் சொல்லித் தரும் இயந்திரங்களாக இருக்கிறார்கள். அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களை பள்ளிகள் தயாரித்து அனுப்புகின்றன.
பெற்றோர் தங்களுடைய விருப்பப்படி பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். நிலவனுக்கோ பயலாஜி பிரிவு பிடிக்கவில்லை. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க அவனுடைய அப்பா அனுமதிக்கவில்லை.விளையாட்டுகளில் அவனுக்கு ஆர்வம் அதிகம். வகுப்புத் தேர்வில்இரண்டு பாடங்களில் தோல்வி என்பதற்காக விளையாட்டுப் பயிற்சி செய்ய பள்ளியில் அனுமதியில்லை.
மாணவர்களைத் தண்டிப்பதில் அக்கறை செலுத்தும் ஆசிரியர்கள்.ஆனால் இந்தச் சூழ்நிலைகள் எல்லாம் நிலவனை நன்றாகப் படிக்கும் மாணவனாக மாற்றிவிடவில்லை.
இளம் பருவத்தினரிடம் ஏற்படும் காதல் நிலவனுக்கும் ஏற்படுகிறது. சாரா என்கிற மாணவியைக் காதலிக்கிறான்.
"பள்ளிக்கூடம் படிப்பதற்காக மட்டுமே இல்லை. பள்ளிக்கடத்தில் மனிதர்களைக் கற்றுக்கொள்ளுங்கள். பள்ளிக் கூடத்தில் திறமைகளைத் தேடுங்கள். பள்ளிக்கூடத்தில் உறவுகளைப் பேணுங்கள். புத்தகங்களை மூடிவிட்டு என் பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்ததுதான் இன்றைக்கு ஒரு புத்தகமாக உங்கள் கைகளில் இருக்கிறது' என்று முடிகிறது நாவல்.
இன்றைய கல்விமுறை எப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்கி வைத்திருக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ள, அவர்களோடு வாழ்ந்த அனுபவத்தைப் பெறவிரும்புபவர்கள் இந்த நாவலை அவசியம் படிக்க வேண்டும்.