தமிழ்க் கடல்மணி (திருச்சி தமிழ்ப் பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன் வரலாறு) - இரா.இராமமூர்த்தி; பக்.304; ரூ.20; ரேர் பப்ளிகேஷன்ஸ், "ஸ்ரீவிஜயம்', எண்.9, விஜயராகவா சாலை, தி.நகர், சென்னை-17.
மேடைப் பேச்சுலகில் "ஆர்.ஆர்' என்பது எல்லாருக்கும் ஒரு மந்திரச் சொல். அவர்தான் ஆர்.இராதாகிருஷ்ணன். மேடைப் பேச்சினூடாக தேசிய உணர்வையும் விதைத்த மிகச்சிறந்த தேசியவாதியும் கூட.
மேடைப்பேச்சு மட்டுமல்ல, இசையிலும் நாட்டம் கொண்டு புல்லாங்குழல், மோர்சிங், கஞ்சிரா ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தவர். கம்பன் கழகத்தில் தனக்குக் கிடைத்த பல வாய்ப்புகளைப் பலருக்கும் மாற்றிக்கொடுத்து இலக்கிய உலகில் பலரையும் உயர்த்தியவர் ஆர்.ஆர்.
அவரது குடுமிதான் அவரது தனிப்பட்ட தோற்றப் பொலிவின் அடையாளம். குடுமியுடன் பெரிய அரங்குகளில் இவர் பேசச் செல்லும்போது, எல்லோராலும் ஒரு மாதிரியாகப் பார்க்கப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் பேசி முடித்ததும் அரங்கத்தில் எழுந்த கரவொலி அடங்க பல நிமிடங்கள் ஆகியிருக்கின்றன. கம்பன் அடிப்பொடி சா.கணேசன் "முதுகுடுமிப் பெருவழுதி' என்றே இவரை அழைத்து மகிழ்ந்திருக்கிறார்.
இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டுக்கும் செல்லாத ஆர்.ஆரின்புகழ், (அவரது உரைகள் ஒளிப் பேழைகளாக)உலகெங்கும் பரவியுள்ளன.
ஆர்.ஆரின் வாழ்க்கை வரலாறு மிக நேர்த்தியாக, பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. "அவரைப் பற்றி இவர்கள்' என்ற தலைப்பில், ஆர்.ஆருடன் நெருங்கிப் பழகிய பல்வேறு ஆளுமைகளான, அ.ச.ஞா.,அ.அறிவொளி, இலங்கை ஜெயராஜ், சொ.சொ.மீ.சுந்தரம், சுகி.சுவம், ம.வே.பசுபதி, சொ. சத்தியசீலன் போன்றோரின் இரங்கற்பாவும், உருக்கமான அனுபவப் பதிவுகளும் ஆர்.ஆர். பற்றிய மதிப்பீட்டை மிக உயர்த்திக் காட்டுகின்றன.