இந்த மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை - வி.சண்முகநாதன்; பக்.192;ரூ.150, விஜயா பதிப்பகம்,கோயம்புத்தூர்-1; )0422-238261.
வேதங்களின் அரிய சிந்தனைகளை சாதாரணமக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் 21 அத்தியாயங்களில் விளக்கியிருப்பது வியக்க வைக்கிறது.
ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் சாரம்சத்தை, குறள் போல சுருக்கி அதன் பதங்கள், சூக்தங்களை குறிப்பிட்டிருப்பது பாராட்டுக்குரியது.
காயத்ரி மந்திரம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எந்த வேதத்தில் எத்தனையாவது மண்டலத்தில் எந்த வகைப் பாடலாக உள்ளது என்பது ரத்தினச் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அதைப் படிப்போருக்கு ஏற்படும் நன்மைகளும் ஆய்வு நோக்கில் விளக்கப்பட்டுள்ளது.
வேதங்களை விளக்கும் ஆசிரியர் தமிழ் ஞானநூல்களையும் கம்பனில் தொடங்கி பாரதியின் பாடல்கள் வரை எடுத்துக்காட்டி தெளிவுபடுத்தியுள்ளார். வேத கருத்துகள் தமிழ் ஞானநூல்களில் எவ்வாறெல்லாம் கையாளப்பட்டிருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பகவத் கீதை வாழ்க்கைக்கு வழிகாட்டும் பாதையாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. நூலில் வால்மீகி ராமாயணத்தை எழுதியதன் பின்னணியில் பறவையைக் கொன்ற வேடன் இருப்பதை சிறு சம்பவம் மூலம் விளக்கியிருப்பது படிப்போர் ஆர்வத்தைத் தூண்டுவதாகஉள்ளது.
சாஸ்திரங்களில் மரணம் குறித்த பார்வை எவ்வாறு உள்ளது என்பதை சாவித்ரி- சத்தியவான் கதையின் மூலம் "மரணமில்லாப் பெருவாழ்வு' என்ற தலைப்பின் கீழ் விளக்கியிருப்பது சிறப்பு.
நூலெங்கும் நம் முன்னோர்களின் அரிய பல கருத்துகள், எளிமையாக விளக்கப்பட்டிருக்கின்றன; இளம் தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல்.