பா.தண்டபாணி; பக். 200; ரூ.180; விஜயா பதிப்பகம்,
கோயம்புத்தூர்; -0422 -2382614.
உலகம் இன்றளவும் தேடிக் கொண்டிருக்கும் மிகச் சிறந்த வாழ்வியல் முறைகளை நமக்கு வழங்கியவர் வடலூர் வள்ளல் பெருமான். அவரது சிறப்புகளும் சன்மார்க்க கோட்பாடுகளும் எளிய முறையில் தொகுத்து இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.
பதினெட்டு அத்தியாயங்களில் வள்ளலார் பற்றியும் அவரது மரணமில்லாப் பெருவாழ்வு குறித்த சிந்தனைகளும் தரப்பட்டுள்ளன. "சைவ சித்தாந்தமும் சன்மார்க்கமும் வேறு வேறு அல்ல; சன்மார்க்கம் என்பது சைவத்தின் உச்சநிலை' என்கிறார் நூலாசிரியர்.
"உருவராகியும் அருவினராகியும் உருஅருவினராயும் ஒருவரே உளார் கடவுள் கண்டறிமினோ... '
(ஆறாம் திருமுறை 1627- ஆம் பாடல்) - ஒவ்வொருவருக்கும் உயிர் ஒன்றுதானே உள்ளது. கடவுள் பலர் என்றால் உயிரும் ஒன்றுக்கும் மேல் இருக்குமல்லவா என்பது சிந்தனையைத் தூண்டும் வள்ளலாரின் வினா. இதனை உணராமல் கடவுளைப் பலர் என மயங்குவதை அவர் சாடுகிறார்.
மெய்கண்டார் அருளிய சிவஞானபோதத்துக்கு விளக்க உரையாக "ஜீவ காருண்ய ஒழுக்கம்' என்ற படைப்பைத் தந்துள்ளார் வள்ளலார். அடியார்களைப் பேணுதல், அனைத்துயிர்களுக்கும் உதவுதல், ஆலயம், வழிபாடு பற்றி அதில் குறிப்பிட்டுள்ளார்.
வள்ளலார் பெருமான் தனது ஒன்பதாவது வயதில் "ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்ற பாடலை இயற்றினார். இந்த பாடல் ஐந்தாம் திருமுறையில் "தெய்வ மணி மாலை' என்ற தலைப்பில் உள்ளது. காலவரிசைப்படி இதனை முதல் திருமுறையில் பதிப்பித்திருக்க வேண்டும் என்பது நூலாசிரியரின் கருத்து.