அருமை அண்ணாச்சி- வி.ஜி.சந்தோசம்;பக்.352; ரூ.260; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14;) 044- 2813 2863.
மறைந்த தனது அண்ணன் வி.ஜி.பன்னீர்தாஸின் வாழ்க்கையை எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் வி.ஜி.சந்தோசம் இந்நூலை எழுதியிருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம் அழகப்பபுரம் அருகே உள்ள தருமத்துப்பட்டியில் வி.ஜி.பன்னீர்தாஸ் பிறந்தது, வி.ஜி.பி.சகோதரர்களின் தந்தை மலேசியாவுக்குச் சென்றது; அம்மாவின் கடும் உழைப்பினால் இவர்கள் வளர்ந்தது எனத் தொடங்குகிறது இவர்களின் வரலாறு.
படிப்பை நிறுத்திவிட்டு ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்து உழைக்கிறார். மளிகைக் கடைக்காரர் மனைவியின் மறைவால் கடையைத் தொடர்ந்து நடத்த முடியாமல், கடையில் வேலை செய்யும் பன்னீர்தாஸுக்கு ரூ.150-க்கு கடையை விற்றுவிடுகிறார். அந்தப் பணத்தை முழுமையாகத்தரமுடியாத பன்னீர்தாஸ், தவணை முறையில் தந்து கடையை வாங்கி நடத்துகிறார். தவணை முறையின் தொடக்கம் வி.ஜி.பன்னீர்தாஸ் சகோதரர்களின் வாழ்க்கையில் இப்படி அமைகிறது.
அதற்குப் பின் அந்தக் கடையில் இருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டதும், சென்னைக்கு வந்து ரொட்டிக் கடையில் வி.ஜி.பி. வேலை செய்திருக்கிறார். அதன் பிறகு தவணை முறையில் பணம் வசூலித்து, குலுக்கல் முறையில் பொருள்களை விநியோகம் செய்கிறார்கள். அதற்கும் தடை ஏற்படுகிறது. அந்தக் காலத்தில் புகழ் பெற்ற மர்பி ரேடியாவின் டீலர்ஷிப் கிடைக்க கடும் முயற்சி மேற்கொண்டது, தவணைமுறையில் பொருள்களை விற்பனை செய்தது, வி.ஜி.பி.தங்கக்கடற்கரை சுற்றுலா மையத்தை அமைத்தது, வீடு கட்டித் தரும் வி.ஜி.பி. ஹவுசிங் பேக்டரியை தொடங்கியது என விஜிபி சகோதரர்களின் வெற்றிகரமான வாழ்க்கைப் பயணம் முழுவதும் துன்பங்களும் சோதனைகளும் அடிக்கடி குறுக்கிடவே செய்திருக்கின்றன. ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மீண்டும் கடின உழைப்பே மட்டுமே நம்பி அவர்கள் முன்னேறியிருக்கின்றனர் என்பதை கதைவடிவில் மிக எளிமையாகச் சொல்லும் சிறந்த நூல்.