உடுமலை வரலாறு - உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம் ஆசிரியர் குழு; பக்.608; ரூ.500; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; -044 - 2434 2926.
உடுமலைப்பேட்டை நகரத்தின் விரிவான வரலாறு இந்நூல். உடுமலைப்பேட்டை அமைந்துள்ள கொங்குநாட்டின் பூகோள அமைப்பு, அந்நகரைச் சுற்றியுள்ள ஊர்கள், அவற்றின் பெயர்களுக்கான காரணங்கள் கூறப்பட்டுள்ளன.
உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஐவர் மலை சமணர்கள் வாழ்ந்த மலையாக இருந்திருக்கிறது.
குடிமங்கலம் பொள்ளாச்சி தாராபுரம் சாலை - உடுமலை பல்லடம் சாலை சந்திப்பில் உள்ள ஓர் அரசு மருத்துவமனை வளாகத்தில் காணப்படும் கல்வெட்டில் அச்சுதராய மன்னர் 16 - ஆம் நூற்றாண்டில் பொதுநன்மைக்காக பிராமணர் சத்திரங்களை ஏற்படுத்தி அவற்றுக்கு பூளவாடி, குடிமங்கலம் என்று பெயரிட்டதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் வழிபாட்டுமுறைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
1918- ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டை நகராட்சி நிலை அடைந்தது. உடுமலைப்பேட்டை நகராட்சியின் தலைவராக இருந்தவர்களைப் பற்றி இந்நூல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்நகரின் இஸ்லாமிய மத வளர்ச்சி, கிறித்துவ மத வளர்ச்சி பற்றிய தகவல்கள் கூறப்பட்டுள்ளன. பல உடுமலைப்பேட்டை பிரபலங்களைப் பற்றிய செய்திகள் வியக்க வைக்கின்றன.
உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம், விவசாயிகளின் போராட்டங்கள் பற்றிய தகவல்கள், அங்கு உருவாகிய பஞ்சாலைகள், கல்விநிலையங்களின் வரலாறு, அங்குள்ள திரையரங்குகளின் வரலாறு என உடுமலைப்பேட்டையைப் பற்றிய அரிய பல தகவல்களின் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது.