வடசென்னை - வரலாறும் வாழ்வியலும் - நிவேதிதா லூயிஸ்; பக்.263; ரூ.300; கிழக்கு பதிப்பகம், கிழக்கு பதிப்பகம், சென்னை -14; -044-4200 9603.
வடசென்னைப் பகுதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பற்றிய விரிவான பதிவு இந்நூல்.
வடசென்னைப் பகுதியில் சாலையின் ஓரத்தில் உள்ள மாடிப் பூங்காவை எல்லாரும் பார்த்திருப்பார்கள். 1957- இல் திறந்து வைக்கப்பட்ட மாடிப் பூங்கா, 200 ஆண்டுகளுக்கு முன்பு சீனப் பெருஞ்சுவரைப் போல இருந்த மதராஸ் பெருஞ்சுவரின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. ஹைதர்அலி, திப்புசுல்தான் ஆகியோரின் அச்சுறுத்தல்கள் இருந்தபோது, கட்டப்பட்ட 3.5 மைல் நீளமுள்ள பெருஞ்சுவரின் ஒரு பகுதிதான் இந்த மாடிப் பூங்கா. சுவரின் மேற்குப் பகுதியில் நுழையும் பொருள்களுக்கு கிழக்கிந்திய கம்பெனி வரி விதித்தது. அந்த வரிக்குப் பெயர் சுவர் வரி. அதாவது வால் டாக்ஸ். இப்போதுள்ள வால்டாக்ஸ் ரோட்டின் பெயருக்குக் காரணமாக இந்தச் சுவர் வரி இருந்திருக்கிறது.
இதுபோன்று வடசென்னையின் ராயபுரம், கல்மண்டபம், ராயப்பர் சர்ச், மீன் சந்தை, தொண்டியார் தர்கா உள்ளிட்ட பல இடங்களின் வரலாற்றை நூலாசிரியர் மிகத் தெளிவாக விவரிக்கிறார்.
வடசென்னையின் புகழ்பெற்ற ரெய்னி மருத்துவமனை, ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை, சுழல்மெத்தை அமைந்துள்ள பகுதி, காசிமேடு துறைமுகம் என பல இடங்களுக்குச் சென்று அவற்றைப் பற்றிய விரிவான வியக்க வைக்கும் தகவல்களைக் கூறியிருக்கிறார் நூலாசிரியர்.
வடசென்னை பகுதியில் அழிந்துபோன பல வரலாற்றுத் தடயங்களைப் பற்றியும் பராமரிக்கப்படாமல் அழிந்து கொண்டிருக்கும் வரலாற்று தடயங்களைப் பற்றியும் நூல் குறிப்பிடுகிறது.