குசிகர் குட்டிக் கதைகள் - அ.மாதவையா; பக்.208; ரூ.210; அர்ஜித் பதிப்பகம், நாகர்கோவில் -2; -4652- 227268.
தமிழின் முதல் நாவலாசிரியர்களில் ஒருவரான அ.மாதவையா எழுதிய பத்தொன்பது சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தமிழக கிராமங்கள் - குறிப்பாக பிராமணர்கள் அதிகம் பேர் வசிக்கும் இடங்கள் - இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகளின் களமாக
இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவர் அக்கிரஹாரத்துக்குள் வந்துவிட்டதால் அவர் மீது பிராமணர்கள் பகை கொள்ள அந்த தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் மாற்று மதத்துக்கு மாறுவது (குதிரைக்காரன் குப்பன்), தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பெரும் பணக்காரராக இருந்தும், பிராமணர்கள் அவரை மதிப்புடன் நடத்தாததால், அவர் தன் மகனை ஆங்கிலம் படிக்க வைத்து அரசு அதிகாரியாக்கி, அதே ஊருக்கு அவர் மகன் அதிகாரியாக வரும்போது ஊரிலுள்ள அனைவரும் அவர் மகனை வணங்கி வரவேற்பதைப் பார்த்து பெருமிதப்படுவது (தந்தையும் மகனும்), பெற்றோர் உயிருடன் இருக்கும்போது அவர்களைக் கனிவுடன் கவனிக்காத ஒரு பிராமணர் அவர்கள் இறந்த பின் ஊர் மெச்ச வேண்டும் என்பதற்காக ஆடம்பரமாக அவர்களுக்கு திதி கொடுப்பது (இருக்கும்போது இல்லை), காதல் திருமணம் செய்து கொண்ட ஒருவன் மனைவி மீது சந்தேகம் கொள்ள இருவரும் திசைக்கொருவராகப் போகிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பின் தன் மனைவியையும் மகளையும் ஒரு திருவிழாவில் சந்திக்கிறான் பரதேசி ஆகிவிட்ட கணவன் (ஆலமரத்தின் கீழே) - இப்படி ஒவ்வொரு கதையும் உத்தியிலும் உள்ளடக்கத்திலும் தனித்துவம் பெற்றிருக்கின்றன.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இப்படிப்பட்ட கதைகள் எழுதப்பட்டிருப்பது வியப்பையும் மகிழ்வையும் அளிக்கிறது.