எந்தையும் தாயும்; ஆசிரியர் - நரசய்யா; பக்.297; ரூ.230; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை; )044-2813 2863.
தமிழ் இலக்கியத்தில் தனக்கென தனியிடத்தைக் கொண்டுள்ள நரசய்யாவின் புதிய படைப்பு இது. புதுகைத் தென்றல் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியாகியுள்ளது.
தனது வாழ்க்கைப் பயணத்தின் வழியே தேசத்தின் வரலாற்றை விவரித்திருக்கிறார் நூலாசிரியர். தமிழகத்துக்கு வந்த காந்தியை கூட்ட நெரிசலில் சின்னஞ் சிறுவனாக தரிசித்ததில் இருந்து தொடங்குகிறது நரசய்யாவின் நினைவோடை.
அவரது தந்தையின் வழியாக தேசத்தின் விடுதலைக்கு விதையாக இருந்த தலைவர்களைப் பற்றி அறிந்த கதைகளையும், பால்ய வயதில் தாம் பார்த்த சுதந்திரப் போராட்டக் களத்தையும் கண் முன்னே காட்சிப்படுத்தியுள்ளார். காந்தியின் மரணம் வரையிலான இந்திய சரித்திரத்தின் சாட்சியக் குறிப்பாக இந்நூல் விளங்குகிறது.
வெள்ளி ஓடை போன்ற தெளிவான எழுத்து நடை, வரலாற்று நிகழ்வுகளைக் கூட வெகு எளிமையாக வாசகர்களுக்கு எடுத்துரைக்கிறது. இந்திய சுதந்திரத்தின் இறுதிக்கட்ட நிகழ்வுகளையும், விடுதலைக்குப் பிறகு தேசம் எதிர்கொண்ட சோதனைகளையும் குறுநாவல் போல விவரித்திருக்கிறார் நூலாசிரியர். நாட்டின் அடிமை விலங்கை உடைத்த அருந்தலைவர்களை சமகாலத்துக்கு அறிமுகப்படுத்தும் முக்கியப் பதிவு இந்நூல்.