திருவருட்குறள் (மூலமும் உரையும்) - ஆளரியார் என்ற ஆதிநரசிம்மன்; பக்.799; ரூ.750; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; 044-2536 1039.
"கால வகையினான் புதியன புகுதல்' என்பது இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஒன்று.
திருவள்ளுவரின் திருக்குறளை அடியொற்றியும், அடித்தளமாகவும் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முப்பால்களையும், 366 அதிகாரங்களையும் கொண்டு, இயலுக்கு பத்து குறள்களாக, அதிகாரப் பெயர்களில் சில மாற்றங்களுடன் அமைந்துள்ளது.
"கற்புடைமை' (13) அதிகாரத்தில், "கற்புடைய பொற்புடையார் நல்லுருச் செய்துலகு/ கற்கோட்டம் கட்டித் தொழும்' என்றும்; "கணவன்-மனைவி கடன்' எனக் கூறும் (22) அதிகாரத்தில், "படிப்பும் பதவியும் பட்டமும் வாசல்/ படியிலே விட்டுள்வரல்', துணைவருக் கென்றும் துரோகத்தைச் செய்யா/ திணையரே வாழ்வீர் இணைந்து', "ஒவ்வொரு செய்கைக்கும் கையூட்டு வேண்டுமெனில்/ எவ்வாறு உயரும் நாடு?' (2141) என்று கையூட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்து, "பயங்கர வாதத்தைத் தீவிரவாதத்தை/ அயராது அழித்தல் தலை' (2201) என்று இன்றைக்கு உலகில் தலைவிரித்தாடும் இவ்விரண்டு தீமைகளையும் ஒழிக்கச் சொல்கிறார்.
உடலுறுப்பீதல், தற்கொலை, மானக் கொலைகள், பெண் சிசுக்கொலை, கட்சித் தலைவர் பண்பு, வாக்களித்தல், மதவெறி இல்லாமை, எதிர்க்கட்சியினர், அலிகளும் மாந்தரே, மாசு ஒழிப்பு, விதவை வாழ்வு, பாலியல் வன்முறை முதலிய இக்காலத்திற்கேற்ற கருத்துகளை உள்ளடக்கி இலக்கியச் சிறப்புடனும், புதுமைக் கருத்துகளுடனும், புரட்சிக் கருத்துகளுடனும் பாடப்பட்டிருக்கும் இந்தத் திருவருட் குறளும், "வள்ளுவர் குறள்' போல உலகெங்கும் ஒலிக்க வேண்டும்.