பிற்காலச் சோழர் சரித்திரம் (முழுமையாக) - டி.வி.சதாசிவ பண்டாரத்தார்; பக்.592; ரூ.570; ஜீவா பதிப்பகம், 12/28, செளந்தரராஜன் தெரு, தியாகராய நகர், சென்னை-17.
கிபி 846 முதல் கி.பி.1279 வரை சோழ மண்டலத்தை ஆண்ட அரசர்களின் வரலாறு இந்நூல். மூன்று பகுதிகளாகத் தனித்தனியாக வெளியிடப்பட்டிருந்த பிற்காலச் சோழர் சரித்திரத்தைத் தொகுத்து முழுமையாக வெளியிட்டிருக்கிறார்கள்.
சோழப் பேரரசை நிறுவ அடிகோலிய விசயாலயன் (கி.பி.846 -881) காலம் முதல் பாண்டிய மன்னன் முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியனுடன் போரிட்டு சோழப் பேரரசை இழந்த மூன்றாம் இராசேந்திர சோழன் (கி.பி.1246 -1279) வரை ஆண்ட சோழ மன்னர்களின் வரலாறு இந்நூலில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த மன்னர்கள் நடத்திய போர்கள், வென்ற பகுதிகள் பற்றிய வரலாறு மட்டுமல்லாமல், பிற்காலச் சோழர்களின் ஆட்சிமுறை, நிர்வாகம், கலை, பண்பாட்டு வளர்ச்சி பற்றியும், அக்கால மக்களின் வாழ்க்கைநிலை பற்றியும்
கூறுகிறது.
சோழப் பேரரசின் நிலப்பரப்பு முழுவதும் முதலாம் ராசராச சோழன் காலத்திலும் (கி.பி.985- 1014) அதற்குப் பிறகு 70 ஆண்டுகள் கழித்து முதற்குலோத்துங்க சோழன் காலத்திலும் அளக்கப்பட்டு அதன் அடிப்படையில் விளைநிலங்களுக்கு மட்டும் வரி வசூலித்தது தெரிய வருகிறது. நில வரி தரமுடியாத மக்கள் நிலத்தை விட்டு வெளியேறியதும் நிகழ்ந்திருக்கிறது.
கோயில்களின் நிர்வாகம் மற்றும் கோயில் சார்ந்த கலை வளர்ச்சிக்கு சோழர்காலத்தில் நிலங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. குடவோலைமுறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமசபைகள் மூலமாக நிர்வாகம் நடந்திருக்கிறது. பக்தி இலக்கியங்கள் மலர்ந்திருக்கின்றன. அணைகள், கால்வாய்கள் மூலமாக நீர்ப்பாசனம் செழிப்படைந்திருக்கிறது.
பிற்காலச் சோழர்களின் முழுமையான வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவும் சிறந்த நூல்.