சுகப்பிரசவம் இனி ஈஸி - டாக்டர் கு.கணேசன்; பக்.208; ரூ.150; சூரியன் பதிப்பகம், சென்னை-4; 044 - 4220 9191.
சுகப்பிரசவம் இனி ஈஸி என்று நூலின் தலைப்பு சொன்னாலும், சுகப்பிரசவம் எளிதாக அமைய எவ்வளவு விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நூலாசிரியர் சொல்கிறதைப் படிக்கும்போது மலைப்பாக இருக்கிறது.
ஒரு பெண் கருவுறுதலுக்கு முன்பிருந்து எவ்வாறு தனது உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதிலிருந்து தொடங்கி, குழந்தை பிறந்து தாய்ப்பால் கொடுப்பது வரை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நூல் விளக்குகிறது.
தொற்றுநோய்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்; பயணங்களைத் தவிர்க்க வேண்டும், காய்ச்சல், தும்மல் போன்றவை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையான பரிசோதனைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி ஸ்கேன் எடுக்கக் கூடாது என்று நினைக்காமல் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் வரக் கூடிய நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சிலருக்கு கர்ப்ப காலத்திலேயே தைராய்டு பிரச்னை, ரத்தசோகை ஏற்பட வாய்ப்புண்டு. கால்கள் வீங்குவதற்கும் வாய்ப்புண்டு. சிறுநீர்த் தொற்று, மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல், அம்மை நோய் போன்றவை வர வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு கர்ப்பமுற்ற பெண்ணுக்கு ஏற்படக் கூடிய பல பிரச்னைகளை எடுத்துக் கூறி, அவை ஏற்படக் காரணம், அப்படி பிரச்னை வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று மிக விளக்கமாக இந்நூல் எடுத்துரைக்கிறது.
பிரசவ காலத்தில் ஏற்படக் கூடிய எதிர்பாராத சிக்கல்களைக் கண்டு பயந்துவிடாமல் இருக்கவும் நூல் வழி சொல்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்.