சங்க கால வானிலை - கு.வை.பாலசுப்பிரமணியன்; பக்.272; ரூ.300; முக்கடல், 11, முப்பத்து மூன்றாம் தெரு, பாலாஜி நகர் விரிவு 3, புழுதிவாக்கம், சென்னை-91.
நவீன வானிலையியல் காற்றைப் பற்றி, மேகத்தைப் பற்றி, மழையைப் பற்றி, காலநிலையைப் பற்றி, வானிலை பற்றி வைத்துள்ள அறிவியல் வரையறைகள் நூலில் விளக்கப்படுகின்றன. அந்த வரையறைகளுக்குப் பொருந்துவிதமாக சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கும் தகவல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
உதாரணமாக காற்றைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன. வடக்குத் திசையிலிருந்து வீசும் காற்றை வாடை, வடந்தை, ஊதை எனவும், கிழக்கிலிருந்து வீசும் காற்றை கொண்டல் எனவும், மேற்கிலிருந்து வீசும் காற்றை கோடை எனவும், தெற்கில் இருந்து வீசும் காற்றை தென்றல் என்றும் குறிப்பிட்டனர். காற்றுவீசும் வேகத்தை அளக்க நவீன காலத்தில் பியூபோர்ட் அளவுமுறை உள்ளது. பியூபோர்ட் எண்.1 என்பது மென்காற்று நிலையாகும். இதுபோன்று பியூபோர்ட் எண்.12 வரை காற்று வீசும் வேகத்தின் அளவை அளக்க முடியும். காற்றின் வேகத்தை விளக்கும் பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் இருப்பதை நூலாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கிறார். இதுபோன்று மழையின் பல்வேறு தன்மைகள், மேகத்தின் பல்வேறு தன்மைகளை அறிவியல்பூர்வமாக விளக்கி, அதைப் போன்று சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கும் செய்திகளையும் நூலாசிரியர் எடுத்துக்காட்டியிருக்கிறார்.