தித்திக்கும் நினைவுகள் - ஏ.ஆர்.எஸ் ; பக்.296; ரூ.200 ; ஏ.ஆர்.சீனிவாசன், 15/ 37, சாரங்கபாணி தெரு, தியாகராயநகர், சென்னை-17 .
ஒய்.ஜி.பார்த்தசாரதி மூலமாக நாடக உலகில் நடிகராக அறிமுகமான ஏ.ஆர்.எஸ்., தனது 50 ஆண்டு கால நாடக, திரையுலக அனுபவங்களைச் சுவைபட எழுதியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, சோ, வீணை எஸ்.பாலசந்தர் ஆகியோருடன் அவர் பழகிய அனுபவங்களைப் பதிவு செய்திருப்பது மிகவும் சுவாரஸ்யம்.
"நவராத்திரி' படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்தது குறித்து சிவாஜியிடம் ஏ.ஆர்.எஸ்.பேசும்போது, "டம்பாச்சாரி' நாடகத்தில் சாமண்ணா 11 வேடங்களைப் போட்டிருக்கிறார்' என்று சிவாஜி அளித்த பதிலில் இருக்கும் அடக்கம் வியக்க வைக்கிறது.
"பராசக்தி' படத்தை முதல்நாள், முதல் காட்சி பார்த்துவிட்டு சிவாஜியின் எதிர்காலம் குறித்து வீணை எஸ்.பாலசந்தர் ஏ.ஆர்.எஸ்.ஸிடம் அன்றே கூறியது; ஸ்ரீதரின் "நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் வார்டு பாயாக நாகேஷ் நடித்ததற்கான காரணம்; 1967 - இல் எம்.ஜி.ஆர். குண்டடிபட்டு குணமான பின்பு, தனக்குச் சிகிச்சை அளித்த செவிலியர் சங்கத்துக்கு உதவ ஒரு நாடகம் நடத்தும்படி ஒய்.ஜி.பி.யிடம் கூறி, எம்.ஜி.ஆர். அந்த நாடகத்துக்குத் தலைமை வகித்தது; சட்டக் கல்லூரியில் சோ-வின் வகுப்புத் தோழரான ஏ.ஆர்.எஸ்,ஸுக்கு சோ-வுடன் ஏற்பட்ட நாடக அனுபவங்கள்; ஏ.ஆர்.எஸ். வரைந்து கொடுத்த லெட்டர் பேடு டிசைனை ஜெயலலிதா நீண்டகாலம் பயன்படுத்தியது, நாடகங்களில் நடித்த, இயக்கிய அனுபவங்கள் என பல தித்திக்கும் நினைவுகள் அடங்கிய நூல்.
ஏறத்தாழ அரை நூற்றாண்டு கால, நாடக, திரையுலக வரலாற்றின் ஒரு பகுதியை நூலாசிரியர் தனது கோணத்தில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். படிக்கத் திகட்டாத நூல்.