திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
இந்த விழாவை முன்னிட்டு நேற்று மாலை அங்குரார்ப்பணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
கரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரம்மோற்சவம் எளிமையாக நடத்தப்பட்டது. மாட வீதிகளில் ஏழுமலையான் வீதியுலா வரும் நிகழ்வு நிறுத்தப்பட்டிருந்தது.
இன்று தொடங்கிய அக்டோபர் 5-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ நாள்களில் மலையப்பசுவாமி வெவ்வேறு வாகனத்தில் வீதியுலா வருவதையடுத்து, இன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளிலும் மலையப்பசுவாமி உலா வருகிறார்.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை முழுவதும் வண்ண விளக்குகளாலும், பல லட்சம் டன் மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது விஐபி தரிசனம், சிறப்பு தரிசனம், மாற்றுத்திறனாளிகள், குழந்தையுடன் பெற்றோர் செல்லும் தரிசனம், ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏழுமலையான் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக 10 லட்சம் லட்டுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.