செய்திகள்

மகர ராசிக்கு இந்த பிரச்னை நீங்கும்: உங்க ராசிக்கு? (ஆவணி மாத பலன்கள்)

தினமணி

ஆவணி மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

கிரகநிலை:
ராசியில் சந்திரன், ராஹூ -  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
01-09-2022 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:
எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை ஒரு நடுநிலைமையுடன் கையாளும் திறன் படைத்த மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் தீர்க்கமான எண்ணமுடையவர்கள் இந்த மாதம் பணவரவு திருப்தி தரும். ஆனால் வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவது நன்மை தரும். தொழில் போட்டிகள் உண்டாகலாம். அனுசரித்து செல்வது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். 

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உறவினர் நண்பர்களிடம் டென்ஷன் இல்லாமல் போவது நல்லது.

பெண்கள் பயன்தராத முயற்சிகளை கைவிட்டு எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியை தரும்.

கலைத்துறையினர் புதிய இடங்களில் திறமையை வெளிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். இரக்க சிந்தனை மேலோங்கும். எதிர்ப்புகள் விலகும். 
அரசியல்துறையினருக்கு செலவு குறையும். எதிலும் அவசர முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மன தெளிவு உண்டாகும். 

மாணவர்களுக்கு எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும்.

அஸ்வினி:
இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

பரணி:
இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்.  ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.

சந்திராஷ்டம தினங்கள்: செப் 03, 04
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 24, 25, 26
பரிகாரம்: கனகராதா ஸ்தோத்திரம் படித்து லட்சுமியை வணங்க எல்லா நலன்களும் உண்டாகும். காரிய அனுகூலம் கிடைக்கும்.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - லாப ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன்,ராஹூ என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்:
01-09-2022 அன்று சுக்ர பகவான் தைரிய,  வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:
எந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும். இந்த மாதம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும்.
தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். 
குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கி டையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதில் சாதகமான பலன் கிடைக்கும்.

பெண்களுக்கு மன குழப்பம் நீங்கி தெளிவான  சிந்தனை மேலோங்கும். பயணங்கள் வெற்றியை தரும்.

கலைத்துறையினர் எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படும். மற்றவர்கள் மத்தியில் உங்களது பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்காது. எனவே அறிவுரைகள் கூறுவதை தவிர்ப்பது நல்லது.

அரசியல்துறையினர் சாமர்த்தியமாக செயல் பட்டு வெற்றி காண்பார்கள். ஆனால் மனதில் ஏதாவது குறை ஏற்படும். எனினும் திறமையாக செயல்படுவீர்கள். 

மாணவர்கள்  புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

ரோகிணி:
இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப் 05, 06
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 27, 28
பரிகாரம்: வைத்தீஸ்வரன் கோயில் வைத்திய நாதஸ்வாமி, முத்துக்குமரனை வணங்கி வர உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும்.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி(வ) - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் சந்திரன்,ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
01-09-2022 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய,  வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:
மற்றவர்களின் கட்டாயத்திற்காக எந்த காரியத்தையும் செய்யாத மிதுன ராசி அன்பர்களே, நீங்கள் எதையும் ஆராய்ந்து செய்வதில் கெட்டிக்காரர். இந்த மாதம் எந்த இடத்தில் பேசும்போதும் கவனமாக பேசுவது நல்லது. வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும். தொழில் தொடர்பான அலைச்சல் உண்டாகலாம். 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. 

குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது மன அமைதியை தரும். வாழ்க்கை துணையின் 
உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசுவது நன்மை தரும்.

பெண்களுக்கு எந்த நிலையிலும்  மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை தரும். வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

கலைத்துறையினர் ஒரு சில சிக்கலான கட்டங்களை சந்திக்க நேரிடும். ஆனால் முடிவில் எதிர்பார்த்த படி சாதகமான பலன் கிடைக்கும். கூடுதலான லாபம் கிடைக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். 

அரசியல்துறையினருக்கு தொண்டர்களின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். கட்சியில் நிம்மதி உண்டாகும். உடல் நிலையில் கவனம் தேவை. 

மாணவர்கள் யாருக்கும் உத்திரவாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.

திருவாதிரை:
இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும் அதிக பாதிப்பு இல்லாமல் காப்பாற்றப்படுவீர்கள். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இந்த மாத பலன்கள் இருக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப் 07, 08
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 29, 30, 31
பரிகாரம்: விநாயக பெருமானை வணங்கி வர எல்லா காரியங்களும் தடை நீங்கி சாதகமான பலன் தரும்.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

கிரகநிலை:
ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி(வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்,ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
01-09-2022 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:
வாழ்க்கையில் முன்னேறும் கடக ராசி அன்பர்களே, நீங்கள் தைரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இந்த மாதம் சில காரியங்களில் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். மனதடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில்  செல்லும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள்  பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது.

குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே  திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும்.
பெண்கள் சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும்.  

கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது  நல்லது.  
அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும்,

மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். 

புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.

பூசம்:
இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம் ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். 

ஆயில்யம்:
இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப் 09, 10
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 01, 02
பரிகாரம்: முருகனுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் பால் பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும். 

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

கிரகநிலை:
ராசியில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி(வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்,ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
01-09-2022  அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:
இனிய சுபாவமும், மென்மையான பேச்சும் உடைய சிம்ம ராசி அன்பர்களே, நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்.  இந்த மாதம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பீர்கள். போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும்.  குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். 

பெண்கள் எதைபற்றியாவது நினைத்து கவலைபடுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை.  விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

கலைத்துறையினர் மற்றவர்களுக்கு உதவி செய்யபோய்  தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.  
அரசியல் துறையினருக்கு சிறிய வேலையையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். 

மகம்:
இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

பூரம்:
இந்த மாதம் கலைத்துறை சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் நீங்கள் விரும்பியது உங்களுக்குக் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்களுக்கு தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப் 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 03, 04
பரிகாரம்:  பவுர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் 

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி(வ) - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்,ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
01-09-2022 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:
காலம் தாழ்த்தாமல் எதையும் உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே, நீங்கள் எடுக்கும் முடிவு மிகவும் ஆராய்ந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். இந்த மாதம் திடீர் கோபம் ஏற்படலாம். நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். 

தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும். 

அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். 

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். 

மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. 

உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.

அஸ்தம்: 
இந்த மாதம் தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.    

சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஆக 17, 18, 19; செப் 13, 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 05, 06
பரிகாரம்: பள்ளிகொண்ட பெருமாள் இருக்கும் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது சிறந்தது.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சனி(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்,ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்:
01-09-2022 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:
அன்பும் பாசமும் கருணையும் ஒருங்கே அமையப் பெற்ற துலா ராசி அன்பர்களே, நீங்கள் மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள். இந்த மாதம் உடல் அசதி ஏற்படலாம். மனதில் ஏதாவது கவலை  இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரத்து திருப்தி தரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள்  தரும்போது கவனமாக இருப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.  பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். 

பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசி பழகுவது நல்லது. 
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம். 

கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். 

மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த  மெத்தன போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

சுவாதி:
இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: ஆக 20, 21; செப் 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 07, 08
பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். 

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி(வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன்,ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
01-09-2022  அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:
மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு தனித் தன்மையுடன் செயலாற்றும் குணமுடைய விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் பணியாற்றுபவர்கள்.  இந்த மாதம் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின்  நலனில் அக்கறை தேவை.  கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில்  மெத்தன போக்கு காணப்பட்டாலும் பணவரத்து நன்றாக இருக்கும். சரக்குகளை கவனமாக கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். 
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். 

பெண்களுக்கு  தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். 

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். 

மாணவர்களுக்கு  கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன்  இருந்த மனகசப்பு மாறும்.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.

அனுஷம்:
இந்த மாதம் கவனமுடன் செயல்படவேண்டியது அவசியம் . தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.

கேட்டை:
இந்த மாதம் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஆக 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 09, 10
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். 

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கிரகநிலை:
ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி(வ) - சுக ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்,ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
01-09-2022 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
பலன்:

எதையும் ஒருமுறை பார்த்தாலே அதை பற்றி கிரகித்துக் கொள்ளும் திறமை உடைய தனுசு ராசி அன்பர்களே, நீங்கள் உழைத்து உயர வேண்டும் என விரும்புபவர்கள். இந்த மாதம், நெருக்கடியான பிரச்சனைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக  இருந்த பிரச்சனைகள் தீரும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். பல வழிகளிலும் பண வரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும்.

குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில்  மதிப்பும், மரியாதையும் கூடும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். 

கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். 

மாணவர்கள்  கல்வியில் முன்னேற்றம் காண  திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.

மூலம்:
இந்த மாதம் வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். தைரியமாகச் செயல்படும் நாள்.

பூராடம்:
இந்த மாதம் பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும், லாபத்தையும் பெறுவார்கள்.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்து சேர்வார்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஆக 24, 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 11, 12
பரிகாரம்: ஐயப்பனுக்கு அபிஷேகத்திற்கு நெய் வாங்கிக் கொடுத்து வணங்கி வர சகல தோஷங்களும் நீங்கும். 

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

கிரகநிலை:
ராசியில் சனி(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் சந்திரன்,ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
01-09-2022 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:
காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமையும், சாதித்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமும் கொண்ட மகர ராசி அன்பர்களே, நீங்கள் எந்த காரியத்தையும் கச்சிதமாக முடிக்கும் திறன் கொண்டவர்கள். இந்த மாதம் தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள்  ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சனை நீங்கும். நண்பர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரியம் ஒன்று நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். 
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களால் இருந்து வந்த மனக்கிலேசங்கள் அகலும்.

பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும்.
அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். 

கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். 

மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும்.

திருவோணம்:
இந்த மாதம் திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள்.

அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் நாள். சோதனைகள் வெற்றியாக மாறும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஆக 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 17, 18, 19; செப் 13, 14, 15
பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். 

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன்,ராஹூ - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
01-09-2022 அன்று சுக்ர பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:
நியாயத்தின் பக்கம் நிற்கும் கும்ப ராசி அன்பர்களே, நீங்கள் அநியாயத்தை எதிர்க்கும் குணமுடையவர். இந்த மாதம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம். 

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. 

பெண்கள் பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.

அரசியல் துறையினருக்கு இந்த காலகட்டம் சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. 

கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை  வாங்கிக்கொடுப்பார்கள். செலவுகளும், அலைச்சலும் கூடும் நாள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.

சதயம்:
இந்த மாதம் கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
இந்த மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஆக 29, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 20, 21; செப் 16, 17
பரிகாரம்: முருகனுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

கிரகநிலை:
ராசியில் குரு(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்,ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
01-09-2022  அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:
யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப்படாமல் தனித்தன்மையுடன் விளங்கும் மீன ராசி அன்பர்களே, நீங்கள் நேர்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற் கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். 

பெண்கள் காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும்.

கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். 
அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு.

உத்திரட்டாதி:
இந்த மாதம் தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

ரேவதி:
இந்த மாதம் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். 

சந்திராஷ்டம தினங்கள்: செப் 01, 02
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 22, 23
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT