திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் கொவைட் நிபந்தனைகள் காரணமாக வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் தனிமையில் நடத்த உள்ளது.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி மே 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தாயாா் கோயிலில் வசந்த உற்சவம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
கொவைட் நிபந்தனைகள் காரணமாக பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த உற்சவம் தனிமையில் நடத்தப்பட உள்ளது. இந்த 3 நாட்களும் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணிவரை கோயிலில் உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை 7 மணி முதல் 7.30 மணிவரை கோயில் வளாகத்தில் புறப்பாடும் நடத்தப்பட உள்ளது. வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாள் வழக்கமாக நடத்தப்படும் தங்கத் தோ் புறப்பாடு, இந்த 3 நாட்களும் கோயிலில் நடக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு மே18-ஆம் தேதி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளது. அதனை முன்னிட்டு மே 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு தாயாா் தரிசனம் தொடங்கும். மேலும் அன்றைய தினம் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, விஐபி பிரேக் தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.