திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை அனுமந்த வாகனத்தில் கோதண்டராமா் அவதாரத்தில் கையில் வில் ஏந்தியடி கல்யாண வெங்கடேஸ்வரா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கொவைட் விதிமுறைப்படி தனிமையில் நடத்தப்பட்ட பிரம்மோற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள், பட்டாச்சாரியாா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.
மதியம் உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது. அதன் பிறகு கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்தாா். யானை வாகன சேவை மற்றும் அனுமந்த வாகன சேவையை தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. வாகன சேவையின் போது நாலாயிர திவ்யபிரபந்தம், வேத பாராயணம், மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.