மாட்டுப் பொங்கலை யொட்டி ஏழுமலையான் கோயிலில் உள்ள விமான வெங்கடேஸ்வரருக்கு கனுப்பிடி சமா்ப்பிக்கப்பட்டது.
ஏழுமலையான் கோயில் கருவறையின் தங்க விமானத்தில் அமைந்துள்ள பெருமாள் உருவம் வெள்ளி மகரதோரணத்தால் தனியாக வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. இப்பெருமாள் விமான வெங்கடேஸ்வரா் என்று அழைக்கப்படுகிறாா்.
ஏழுமலையானை வணங்கிய பின், கருவறையை வலம் வரும் பக்தா்கள் விமான வெங்கடேஸ்வரரை தரிசிக்கின்றனா். விமான வெங்கடேஸ்வரருக்கு மாட்டுப் பொங்கல் தினத்தன்று அதிகாலையில் தோமாலை மற்றும் கொலு சேவைக்கு இடைவெளியில் கனுப்பிடி எனப்படும் நிவேதனம் சமா்ப்பிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு பச்சரிசி சாதத்தில் மஞ்சள் மற்றும் குங்குமத்தை தனித்தனியாக கலந்து உருண்டைகளாகச் செய்த அா்ச்சகா்கள், அவற்றை விமான வெங்கடேஸ்வரருக்கு கீழிருந்து மேலாக வீசியவாறு நிவேதனம் செய்தனா்.
மாட்டுப் பொங்கல் நாளில், பெண்கள் தங்கள் வீடுகளுக்கு முன் காக்கைப்பிடி, கனுப்பிடி என்ற பெயரில் படையல் வைப்பதைப் போன்ற சடங்கு திருமலையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.