ஏழ்மை என்பது நிரந்தரம் இல்லை, வாழ்க்கையில் படிப்பு ஒன்றுதான் உயர்வைத் தரும் என்று கம்பத்தில் உள்ள நேதாஜி ஆதரவற்றோர் இல்லத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி பேசினார்.
தேனி மாவட்ட காவல்துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கம்பம் நேதாஜி அறக்கட்டளை வளாகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திண்டுக்கல் சரக காவல்துறை டி.ஐ.ஜி. முத்துச்சாமி கலந்து கொண்டார். அங்குள்ள குழந்தைகளுக்கு தீபாவளிக்கான புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினார்.
ஆதரவற்ற குழந்தைகள் மத்தியில் அவர் பேசியது,
நேதாஜி இல்லத்தில் உள்ள குழந்தைகள் கடவுளின் குழந்தைகள், உங்களின் எதிர்கால கனவு படிப்பு மட்டும் தான் படிப்பு ஒன்றுதான் உங்களுக்கு வாழ்க்கையில் உயர்வைத் தரும். உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே ஏழ்மை என்பது நிரந்தரமல்ல. நீங்கள் அனைவரும் நாள்தோறும் ஏழ்மை என்பது நிரந்தரமல்ல என காலை, மதியம், இரவு என்று கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் நீங்கள் படிக்கின்ற கல்வி, கல்வியால் தான் உங்கள் வாழ்வில் உயர்வு கிடைக்கும். சிறு வயதில் நான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்காக சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே பயணம் செய்து படித்து வந்தேன். இன்று வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறேன். அதைப்போல நீங்கள் அனைவரும் படிப்பு ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயர்வு அடைய வேண்டும்.
நீங்கள் இந்த ஆதரவற்ற இல்லத்திற்கு வருவதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று பேசினார்.
நிகழ்வில் உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ந.சின்னக்கண்ணு, காவல்துறை ஆய்வாளர்கள் கம்பம் தெற்கு என்.எஸ். கீதா, கூடலூர் கே. முத்துமணி, உத்தமபாளையம் முருகன் சார்பு ஆய்வாளர் திவான்மைதீன், நேதாஜி அறக்கட்டளை நிறுவனர் சோ.பஞ்சுராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியை ரீட்டா ஆசிரியை நன்றி கூறினார்.