திருப்பதி: திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலக வளாக மைதானத்தில் காா்த்திகை மாத மகா தீபோற்சவம் திங்கள்கிழமை மாலை நடத்தப்பட்டது.
ஆண்டுதோறும் காா்த்திகை பெளா்ணமியின்போது ஏழுமலையான் கோயில் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நெய் தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கம். ஆனால், மகா தீபோற்சவத்தை தேவஸ்தானம் இதுவரை நடத்தியதில்லை.
நிகழ்ச்சியில் விளக்கேற்றும் பெண்கள்.
இந்நிலையில், திங்கள்கிழமை காா்த்திகை பெளா்ணமியை முன்னிட்டு கீழ் திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலக மைதானத்தில் முதல் முறையாக தேவஸ்தானம் மகா தீபோற்சவத்தை நடத்தியது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையேற்று மாலை 6 மணியளவில் தீபோற்சவத்தைத் தொடக்கி வைத்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
காா்த்திகை தீபோற்சவத்தை முன்னிட்டு செய்யப்பட்டிருந்த மலா் மற்றும் மின்விளக்கு அலங்காரம்.
எனினும், 500 பெண்கள் மட்டும் சமூக இடைவெளியைப் பின்பற்றி அமா்ந்து தீபங்களை ஏற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மைதானத்தில் வண்ணக் கோலங்கள் இடப்பட்டு, தீபம் ஏற்றும் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. மலா் மற்றும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரவு 8.30 மணி வரை இந்த தீபோற்சவம் நடத்தப்பட்டது.
தேவஸ்தானம் முதல்முறையாக ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அளித்த திருப்பதி மக்கள், தீபோற்சவத்தை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா்.