புரட்டாசி சனிக்கிழமையில் விரதமிருந்தால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலனாம்!

இன்று  புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை. புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதம் முழுக்க
புரட்டாசி சனிக்கிழமையில் விரதமிருந்தால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலனாம்!

இன்று  புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை. புண்ணியம் மிகுந்த இந்த மாதத்தில் பல விரதங்கள், வழிபாடுகள், பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. உணவுக் கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. 

அந்த  வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். பொதுவாக இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும்  சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.  எனவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்றும் அழைப்பார்கள். 

எல்லா தமிழ் மாதங்களுக்கும் சிறப்பான மாதங்கள்தான் என்றாலும் புரட்டாசிக்கென்று ஒரு சிறப்பு உள்ளது. புரட்டாசி மாதம் என்பது ஜோதிடத்தில் கன்னி ராசியை  குறிக்கும், கன்னிராசியின் அதிபதி புதன். புதனின் அதிதேவதை திருமால் என்பதால் புரட்டாசி சிறப்பு வாய்ந்ததாகும்.  புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில்  உண்டியல் ஏந்தி கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று காணிக்கை செலுத்துவர்.

ஏழுமலையான் தளிகை

திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில்  ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு படைப்பது தளியல் ஆகும். வீடு வாசலை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி படைக்கும் இடத்தில் படையல் கோலம் போட வேண்டும். தளியலுக்கு தேவையான சர்க்கரை பொங்கல், எள்ளு பாயசம், புளி சாதம், தயிர் சாதம், தளியல் வடை, கொண்டை கடலை சுண்டலுடன் வாழைக்காய் பொரியல் ஆகிய நைவேத்தியங்கள் தயார் செய்ய வேண்டும்.

குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் நெய் தீபம் ஏற்றி கோலத்தின் இருபுறமும் வைக்க வேண்டும். குத்து விளக்கிற்கு குங்குமம் வைத்து துளசி மாலை அணிய  வேண்டும். மூன்று நுனி வாழை இலைகளை விளக்கிற்கு முன்புறம் போட்டு நைவேதயங்களை இலையில் பரிமார வேண்டும். உத்தரணி அல்லது ஒரு பாத்திரத்தில்  தண்ணீரில் துளசியை கலந்து வைக்கவும். தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, பாக்கு, சூடம் விபூதி குங்குமம் இவைகளை தட்டில் வைத்து தூப தீப ஆராதனை செய்து "கோவிந்தா" என்ற நாமத்துடன் புரட்டாசி சனிக்கிழமை ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபட வேண்டும். 

பெருமாளுக்கு இது உகந்ததாம்..! 

மாவிளக்கு வழிபாடு. இடித்தெடுத்த பச்சரிசி, அச்சுவெல்ல பாகு, ஏலக்காய், எள்  போன்றவை கலந்த இனிப்புக் கலவை விளக்கு வடிவில் தயாரிக்கப்படும். இதில் நெய் ஊற்றி திரிப்போட்டு விளக்கேற்றப்படும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விசேஷமாகும். புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று மாலை அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com