சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் புரட்டாசி கிருத்திகை சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
நவகிரக தலங்களில் செவ்வாய்க்குரிய தலமான இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் சுவாமிகள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை நட்சத்திரத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, கிருத்திகை மண்டபத்துக்கு எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு மஞ்சள், திரவியப் பொடி, பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலான 51வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் நவரத்தினஆபரணங்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீன இளையசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று, பக்தர்களுக்கு அருட்பிரசாதங்களை வழங்கினார்.
எட்டுக்குடியில்...
திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் கிருத்திகை நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் முருகப் பெருமான் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கா. ஆறுமுகம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதேபோல், வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன.