திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் சேகர் ரெட்டிக்கு தீர்மானங்கள் மீது வாக்களிக்கும் உரிமை இல்லாத சிறப்பு அழைப்பாளர் பதவியை அளித்து, ஆந்திர அரசு வியாழக்கிழமை மாலை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவராக ஒய்.வி. சுப்பாரெட்டி கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களான உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுரு, இந்தியா சிமென்ட்ஸ் குழுமத்தின் தலைவர் சீனிவாசன், வைத்தியநாதன், டாக்டர் நிச்சிதா உள்ளிட்ட நான்கு பேர் மற்றும் 25 பேர் ஆக மொத்தம் 29 பேர் கொண்ட அறங்காவலர் குழுவை ஆந்திர அரசு புதன்கிழமை நியமித்தது.
இந்நிலையில், திருப்பதி சட்டப்பேரவை உறுப்பினர் கருணாகர ரெட்டி, தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரான தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி, தில்லியைச் சேர்ந்த ராகேஷ் சின்ஹா, பெங்களூரைச் சேர்ந்த குபேந்திர ரெட்டி, ஹைதராபாதைச் சேர்ந்த கோவிந்த ஹரி, புவனேசுவரத்தைச் சேர்ந்த துஷ்மன்குமார் தாஸ், மும்பையைச் சேர்ந்த அமோல் கேல் உள்ளிட்ட 7 பேரை அறங்காவலர் குழு உறுப்பினராக நியமித்து வியாழக்கிழமை மாலை மீண்டும் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், அவர்களுக்கு தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டம் நடைபெறும் போது கொண்டுவரப்படும் தீர்மானங்கள் மீது வாக்களிக்க உரிமையில்லாத, சிறப்பு அழைப்பாளர்களுக்கான தகுதியை மட்டும் ஆந்திர அரசு வழங்கியுள்ளது. இத்துடன் தேவஸ்தான அறங்காவலர் குழுவில் 35 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
23-ஆம் தேதி பதவியேற்பு: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 35 உறுப்பினர்களும் வரும் 23-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் ஏழுமலையான் கோயிலில் பதவியேற்க உள்ளது. அதன்பின், திருமலையில் உள்ள அன்னமய்ய பவனில் புதிய அறங்காவலர் குழுவின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது.