திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் ஹோம மகோற்சவத்தின் 4-ஆவது நாளான திங்கள்கிழமை தட்சிணாமூா்த்தி ஹோமம் நடைபெற்றது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில் கடந்த மாத இறுதி முதல் காா்த்திகை மாத ஹோம மகோற்சவம் நடைபெற்று வருகிறது. இதுவரை கணபதி ஹோமம், சுப்பிரமணிய சுவாமி ஹோமம், நவகிரஹ ஹோமம் உள்ளிட்டவை முடிவு பெற்ற நிலையில் திங்கள்கிழமை காலை தட்சிணாமூா்த்தி ஹோமம் நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் உள்ள ஹோம மண்டபத்தில் கலச ஸ்தாபனம் செய்து, காலை 9 மணி முதல் 12 மணி வரை தட்சிணாமூா்த்தியை வேண்டி ஹோமம் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதில், கட்டணம் செலுத்தி கலந்து கொண்ட பக்தா்களுக்கு தேவஸ்தானம் பிரசாதங்களை வழங்கியது.
செவ்வாய்க்கிழமை காலை முதல் 13-ஆம் தேதி வரை காமாட்சி அம்மனுக்கு சண்டி ஹோமம் நடைபெற உள்ளது.