திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
இக்கோயிலில் கடந்த 11-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. இவ்விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில், கோயில் திருக்குளத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர். அதன்பின் உற்சவமூர்த்திகள் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மாலையில் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதன் அடையாளமாக கொடிமரத்தில் ஏற்றப்பட்டிருந்த கருடக் கொடி இறக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜர் மாடவீதியில் பல்லக்கில் வலம் வந்தார். இந்த நிகழ்வில் திருமலை ஜீயர்கள் கலந்து கொண்டனர்.