திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் நடந்து வந்த வருடாந்திர வசந்தோற்சவம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
இக்கோயிலில் கோடை வெப்பத்தின் தாக்கம் தணிய வேண்டி வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி கடந்த 2 நாள்களாக திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் தங்கத் தேரில் பத்மாவதி தாயார் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதன் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மதியம் அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் தாயாருக்கு பல்வேறு அபிஷேகப் பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மாலையில் தாயார் மாடவீதியில் வலம் வந்த பின் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வசந்தோற்சவத்தை முன்னிட்டு தேவஸ்தானம் கல்யாண உற்சவம், குங்கும அர்ச்சனை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை ரத்து செய்திருந்தது.