சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவையொட்டி இன்று தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம் விழாவும், விடையாற்றி பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருவிழா கடந்த மே 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு திரளான முருக பக்தர்கள் ஒன்றுகூடி திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். அதைத்தொடர்ந்து, 17-ம் தேதி இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
18-ம் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசண்முகர் வீதி உலாவும், தீர்த்தவாரி கலசாபிஷேகமும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
மறுநாள் 19-ம் தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து வரும் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை விடையாற்றி திருவிழா நடக்கிறது. இதனையொட்டி தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
குறிப்பாக, தினமும் மாலை 6 மணியில் முதல் இரவு 7 மணி வரை பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தெய்வீக பாடல், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இதில் முதல் நாளான 20-ம் தேதி இரவு 7 மணிக்கு வீரமணி ராஜூவின் தெய்வீக பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.