பொன்னமராவதி அருகே உள்ள நெய்வேலி இளங்காவுடைய ஐயனார், விசமுனிக்கருப்பர் கோயில் மற்றம் பரிவார தெய்வங்கள் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடந்தது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு இளங்காவுடைய ஐயனார், விசமுனிக்கருப்பர் கோயில் மற்றம் பரிவார தெய்வங்களுக்கு நாள்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கடந்த 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நாள்தோறும் மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஆண்கள், பெண்கள் அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரின் முன்பு யானை நடந்து செல்ல, முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த தேர் மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. நெய்வேலி, ஆத்தங்காடு, நாகனிவயல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.