திருப்பதியை அடுத்த அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பதியிலிருந்து சென்னை செல்லும் வழியில் 15 கி.மீ. தொலைவில் உள்ள அப்பளாயகுண்டாவில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் பெருமாள் வரத அஸ்தத்துடன் காட்சி அளிப்பதால், அவரை வரம் தரும் பெருமாள் என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் தேவஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை காலை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு, உற்சவ மூர்த்திகள் முன்னிலையில் முதலில், மஞ்சள் துணியில் வரையப்பட்ட கருட பட்டம் மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர், கொடி மரத்துக்கு திருமஞ்சனம் நடத்தி, மாவிலை தோரணம், தர்ப்பை புற்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர், கருட பட்டத்தை பெரிய மாலையில் கட்டி அதை அர்ச்சகர்கள் கொடிமரத்தில் ஏற்றினர்.
இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இரவு 8 மணிக்கு பிரம்மோற்சவத்தின் முதல் வாகன சேவையான பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். வாகன சேவையைக் காண திரண்ட பக்தர்கள் அவருக்கு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர்.