உத்தரமேரூர் தயாளநிதி விநாயகர், மாரியம்மன் கோயில்களில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
உத்தரமேரூர்-காஞ்சிபுரம் சாலையில் ஆணைப்பள்ளம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீதயாளநிதி விநாயகர், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீகெங்கையம்மன் திருக்கோயில்களில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
இப்பணிகள் அண்மையில் முடிவடைந்தன. கடந்த இரண்டு நாள்களாக முதல் கால, இரண்டாம் கால, யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை காலை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்பு, மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசத்தின் மீது வார்க்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவில், அதிமுக மேற்கு மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் தயாளநிதி விநாயகர், மாரியம்மன், கெங்கையம்மன் ஆகிய சுவாமிகள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.