திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வியாழக்கிழமை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.
திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரத்தில், தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. ஏழுமலையான் பத்மாவதி தாயாரை திருமணம் செய்துகொண்டு, திருமலைக்குச் செல்லும் முன், சிறிது காலம் இங்கு தங்கியிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இக்கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தி, 12 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் மகா சம்ப்ரோக்ஷணம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்தது.
அதற்காக வைதீக காரியங்கள் ஜூன் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. புதன்கிழமை மாலை மகா சாந்தி யாகம், மகாபூர்ணாஹுதி, மகா சாந்தி திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிக்கு கோயில் கோபுர கலசங்களின் மீது புனித நீர் வார்க்கப்பட்டு மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டது.
இதில், தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
காலை திருமஞ்சனத்துக்குப் பின், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.