கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்பையும், உதவியையும், சேவையையும் மற்றவர்களுக்குக் கொடுத்துப் பழகுங்கள். இதற்காக எதையும் எதிர்பார்க்கவேண்டாம்.
எதைப் பிறருக்குக் கொடுக்கிறோமோ அது திரும்பவும் ஆயிரம் மடங்காக நம்மிடமே திரும்பிவிடும். ஆனால், இப்போதே அதைப்பற்றிச் சிந்திக்காதீர்கள். நீங்கள் செய்யவேண்டியது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்குக் கொடுப்பது மட்டுமே.
கைகள் இருப்பது பிறருக்கு உதவி செய்யத்தான். பட்டினியாய்க் கிடந்தாலும் கடைசிப் பருக்கையையும் பிறருக்குக் கொடுப்பது தான் நல்லது. கொடுப்பவன் முழுமை பெற்று முடிவில் கடவுளாகிறான்.
ஒருவருக்கு உதவி செய்ய எண்ணி, யாருடைய கை முன்னே நீளுகிறதோ, அவனே மக்களில் சிறந்தவன். பரந்த இந்த உலகத்தில், கிராமம் கிராமமாகச் சென்று மனிதக்குலத்திற்கு நன்மை செய்வதைக் கடமையாகக் கொள்ளுங்கள். மற்றவர்களின் நன்மைக்காக நரகத்திற்குக் கூடச் செல்ல தயாராகுங்கள்.
தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் ஆற்றலைச் சிதற விடாமல் அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான கடமைகளில் அக்கறை காட்டுங்கள்.
சேவை செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. தன் குழந்தைகளில் யாராவது ஒருவருக்கு உதவி செய்யும் வாய்ப்பை கடவுள் அளித்தால் அதன் மூலம் நீங்கள் பாக்கியம் பெற்றவராகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
நல்லவர்கள் உலகில் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதக்குலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை உலக வரலாறு எங்கும் காணமுடியும்.
ஆன்மீக வாழ்வுக்குப் பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆன்மீக பாரதத்தை உருவாக்குவோம்.....!
- கோவை பாலகிருஷ்ணன்