ராணிப்பேட்டை பாலாற்றங்கரை, மிஸ்ரி நகரில் உள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் புதன்கிழமை பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
விழாவுக்கு, கோயில் பரம்பரை அறங்காவலர் பிரத்யங்கிரா முருகனடிமை பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமை வகித்தார். குமாரசாமி மடத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் ராணிப்பேட்டை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி கோயிலுக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து, மகா பிரத்யங்கிரா தேவிக்கு பாலாபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து விரதமிருந்த திரளான பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். இதையடுத்து, சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.
விழாவில், ராணிப்பேட்டை, சுற்று வட்டாரம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.