தெலங்கானா மாநிலம், பக்ஹ்லிங்கம்பள்ளி அருகே உள்ள சிவன் கோயிலில் தாரா பாத்திரம் மூலம் விலங்குகள் தன் தாகத்தைத் தீர்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் அருகே உள்ள பக்ஹ்லிங்கம்பள்ளி எனும் ஊரில் சிவா - அனுமன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவனும், அனுமனும் பிரதான தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இங்குள்ள சிவபெருமானுக்கு 24 மணி நேரமும் குளிர்ந்த நீர் சொட்டுச் சொட்டாக சிவலிங்கத்தின் மீது விழும் படி அபிஷேகம் நடைபெற்று வருகிறது. தாரா பாத்திரம் பொருத்தப்படுவதால் சிவன் தனது பக்தர்களைக் காக்க மழை பொழியவைத்து, பூமியில் சுபிட்சத்தை உண்டாக்குவார் என்பது ஐதீகம்.
அதன்படி, பக்ஹ்லிங்கம்பள்ளியில் உள்ள கோயிலின் சிவலிங்கத் திருமேனிக்கு தாரா பாத்திரம் மூலம் தண்ணீர் சொட்டும் போது வெயிலின் கொடுமை தாளமுடியாமல் அந்தப்பக்கம் வந்த ஆடு, கோழி தண்ணீரைத் தேடி சிவலிங்கத்திற்கு பொருத்தப்பட்ட மினரல் வாட்டரை குடித்து தன் தாகத்தைத் தீர்த்துகொண்ட காட்சி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விலங்குகளின் தாகத்தைத் தீர்ப்பதற்கென்றே சிவபெருமான் இந்த அற்புத லீலை நடத்தி இருப்பாரோ என்று அங்குள்ள பக்தர்கள் பேசிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.