திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேசுவரர் திருக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் விளங்குகிறார். அதன்படி, இந்தாண்டுக்கான தேரோட்ட திருவிழா கடந்த மே மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோத்ஸவ விழாவின் முக்கிய நிகழ்வான இன்று (ஜூன் 12) தேரோட்டத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி செண்பக தியாகராஜர் உன்மத்த நடனமாடி திருத்தேருக்கு எழுந்தருளச் சிறப்புப் பூஜைகளுடன் தேர் புறப்பட்டது.
தொடர்ந்து, அம்பாள் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய தேர்கள் தனித்தனியாகப் பவனி வந்தனர். "நள்ளாறு தியாகேசா" எனப் பக்தர்கள் பக்தி முழக்கமிட்டபடி தேரை வடம்பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துவந்தனர். இதையொட்டி அங்குப் பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நாகை, காரைக்கால் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.