காஞ்சிபுரம்: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காஞ்சிபுரம் அத்திவரதரை இன்று காலை தரிசித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் நிகழ்வு இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. தினமும் வெளி மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசித்துச் செல்கின்றனர்.
48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் உற்சவத்தின் 26-வது நாளான இன்று அத்தி வரதர் பன்னீர் ரோஜா நிறப் பட்டுடுத்தி பாதாம், அத்திப் பழம் மற்றும் முத்துக்கள் அடங்கிய மாலைகளை அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.
ஆடிக்கிருத்தியையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக இன்று காலை முதல் பக்தர்களின் கூட்டம் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.
அத்திவரதரை தரிசனம் செய்வதற்காகத் தினமும் நூற்றுக்கணக்கான முக்கிய அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குடும்பத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்தார். கோயிலுக்கு வரும் தாய்மார்களுக்காக ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும் என்று தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
மேலும், பாஜக தேசிய பொதுச்செயலாளர் ஹெச் ராஜா அத்திவரதரை இன்று காலை தரிசனம் செய்தார்.